பாரோர் புகழ்ந்தேத்தும் நாராயணன்


பாடல் 1 மெட்டு: நாராயணா நின்ன நாம ஸ்மரணை

நாராயணா என்றுன் நாமந்தனை தினமும்,
பாராயணம் செய்வார் (அவர்) பதமலர் பணிந்தெழுந்தேன்!
(நாராயணா)

நாலயிரம் முறையும் நாதன் உந்தன் நாமம் சொல்வார்!
நயந்தவர் உறவதுவும் நாடிட மனம் விழைந்தேன்!!

(நாராயணா)

வாரணம் சூழ, வரிசங்கம் நின்றூத,
நாரணன் கைப்பிடித்த நங்கையவள் பாடும் தமிழ்!
தேனினும் இனியதென, திருப்பாவைப் பாடல்களை;
நானும் உவந்து பாட, நல்ல நாளுமிங்கே வந்ததுவே!!

(நாராயணா)

பாடல் 2 மெட்டு: பாவமுலோனா
மாலவன் திருநாமம், மனதினில் நினைந்துருகி,
ஞாலமெலாம் போற்றும் திருநாளுமிதுவல்லவோ!

(மாலவன்)

கோலமயில் நப்பின்னை அவள் கூடலின் தனை மறந்த
நீலவண்ணனை எழுப்ப, நங்கையர்கள் நித்தமும் கூடிப்பாடும்

(மாலவன்)

ஆண்டவனின் அருள்தனையே அனுதினமும் நாடி
ஈண்டு இப்பாவைகள் இனிய தமிழில் பாடி (தன்) மெய்
தீண்டுபவர் நாளுமிங்கு திருமாலின் அடியவராய்
வேண்டிடுவார் அவர்தம் வேண்டுதலும் நலம் தரவே!!

(மாலவன்)

பாடல் 3
புள்ளினங்கள் இசை பாடப் பொழுதும் புலர்ந்தது!
வள்ளலவன் கோவிந்தன் புகழ் வாழ்த்திட வாராய் நெஞ்சே!

(புள்ளினங்கள்)

மார்கழி பிறந்ததென்று மங்கை நல்லார் மனமகிழ்ந்தார்
மாலவன் திருநாமம் மனமுவந்து பாட

(புள்ளினங்கள்)

ஓங்கி உலகளந்த உத்தமனின் நாமம் சொல்லி
தீங்கின்றிப் பிறர் வாழத் திருவருள் வேண்டிடுவார்
ஆங்கவர் திருவடியை அனுதினம் தொழுதெழவே
பாங்காய் உலகாளும் பக்குவமும் ஈதென்பேன்!!

(புள்ளினங்கள்)

பாடல் 4
வையாவூர்த் தலமுறையும் அய்யா உந்தன் சேவை
செய்யாத நாளுமுண்டோ! சிறப்பதும் அது தருமோ!!

(திருவையாவூர்த்)

எய்யாத பேறுமுண்டோ; இறைவன் உந்தனைப் பாட
உய்ய வழியருளும் உலகளந்த நாயகனே!!

(திருவையாவூர்த்)

செய்யும் எச்செயலும் இங்கு சிறப்பதனை எனக்கருள,
வையம் தழைக்க நல்ல வரமருளும் உனை எண்ணாது,
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நினைப்பின் நல்லுடை தரியோம்;
பொய் சொல்லோம்; நின் நாமம் புகல மறப்போமோ!

(திருவையாவூர்த்)

பாடல் 5
நித்ய கல்யாண வைபவா! நெஞ்சம் விழைந்து,
நின்னருள் நாடி வந்தோம்! நினைக்கும் வரம் தா!!

(நித்ய கல்யாண)

சத்தியம் ஈதென்றே, நின் சன்னதி தேடி வந்தோம்,
சகல செளபாக்கியமும், நற் சந்ததியும் நீயருள்வாய்!!

(நித்திய கல்யாண)

மணவினை இனிதாக மங்கலங்கள் நிரந்தரமாய்த்
துணையொன்று வேண்டி உன்னைத் துதித்திடும் அடியார்கள்
தொடர்ந்தெல்லா நலன் பெறவும், துயரம் தவிர்த்திடவும்,
தொடங்கிய காரியமும், நீ துணை நின்று நடத்திடவே!!

(நித்திய கல்யாண)

பாடல் 6
திருநீர்மலை வளரும் தெய்வம் உனைத் தொழவே!
வருவார் அடியாரவர் வாழ்வதும் வளம் பெறவே!

(திருநீர் மலை)

உருவாகும் பல்லுயிரும் உயர்ந்திட வழியுரைக்கும்
கருவான நாள் முதலாய் அதனைக் காத்தருளும் சிறப்பின்

(திருநீர் மலை)

திருவருளும் நற்பேறும், தினமுமிங்கே எமைச் சேர,
பெருவாழ்வு எமக்கருளும் நின் பேரருளைப் பாடி வந்தோம்!
அருள்வாய் நீ எமக்கென்றே அனுதினமுன் புகழ் பாடும்,
அடியார் குலம் தழைக்க, ஆண்டருளும் இறையே!!

(திருநீர் மலை)

பாடல் 7
விருத்தம்

கோவிந்தா என்று சிறு குழந்தையும் பாடி வந்தால்,
வா இங்கே என்னருகில் என்று வரமருள்வான் வெங்கடேசன்!!
தாயெனவே எம்குறையும் தானாகத் தீர்த்து வைப்பான்!
மாயப் பிறப்பழிக்கும் திருமன்னார்குடிப் பேரழகன்!!

பாடல்

நலம் யாவும் எமக்கருளும் நாராயணா!! உந்தன்
நாமந்தனைப் பாடிடுவோம் நாராயணா!!

(நலம் யாவும்)

வளமான வாழ்வதனை நாராயணா! உன்னை
வணங்கிடுவார் தமக்கருளும் நாராயணா!!

(நலம் யாவும்)

உளமார ஒரு பொழுது நாராயணா! என
உரைப்பவர்க்கும் வாழ்வு தரும் நாராயணா!
நாராயணா! லக்ஷ்மி நாராயணா! நாராயணா! சத்ய நாராயணா!!

(நலம் யாவும்)

பாடல் 8
பாரோர் புகழ்ந்தேத்தும் நாராயணன் நாமம்,
பாவையர் தினம் பாடிப் பறை கொள்ளவே மகிழ்வார்!

(பாரோர் புகழ்ந்தேத்தும்)

கார்வண்னன் நட்பதனை நாடும் காரிகையர் மனம் மகிழ
சீர்வரிசை பல செய்து, அவர் சிந்தை மகிழச் செய்வான்!!

(பாரோர் புகழ்ந்தேத்தும்)

நெய்யூற்றித் திருவிளக்கும் நித்தமும் ஏற்றி வைப்பார்!
நீலவண்ணன் திரு நாமம் நெஞ்சிறுத்தித் தவம் செய்வார்!!!
பொய்யாது அருள் புரியும் புண்ணியனைப் பாடி நிற்பார்!
கையெடுத்துக் கும்பிடவும் கருணை செய்யும் தெய்வம்!!

(பாரோர் புகழ்ந்தேத்தும்)

பாடல் 9
திருப்பதி மலை வாழும் தெய்வம் உனைத் தொழுவார்;
தினமிங்கு வரும் அடியவர் அவர் விருப்பமும் அருள்புரிவாய்!!

(திருப்பதி)

ஏழுமலை சூழ இங்கு இசைந்து குடிகொண்டாய்!
இறைவன் உன் நாமந்தனை இசைப்பதும் பேறெனவே!!

(திருப்பதி)

வாழும் வழி ஈதென்று எம்மை வழி நடத்தும் இறைவன்;
வணங்கிப் பணிந்தார் வேண்டும் வரமதும் அருள் தலவன்!!
ஆழாழி சூழும் இந்த அகிலமும் பயனுறவே
அனுதினம் கோவிந்தா என்போர் அகமதும் மகிழ்ந்திடவே!!

(திருப்பதி)

பாடல் 10
பாரோர் புகழ்ந்தேத்தும் நாராயணா! உந்தன்
பாதம் பணிந்து நித்தம், பரவி நிதம் தொழுதோம்!

(பாரோர்)

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமியர்காள்
சிந்தை கலந்து நாளும், செந்தமிழில் பாடி வந்தார்!!

(பாரோர்)

வாராத சுகமுண்டோ வள்ளலுந்தன் நாமம் சொல்லி
வணங்கித் துதித்திடுவார் வாழ்வில் நிரந்தரமாய்
பேறுகள் அனைத்தும் தரும் பெயரிது என்றறிந்தோம்
வேறோர் தெய்வம் உண்டோ! (அடியார்) விருப்பத்தின் அருள் செய்யும்

(பாரோர்)

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home